திங்கள், 21 அக்டோபர், 2019

கட்டுரை


காலை எழுதவுடன் சில பக்கங்களையாவது படிக்காமல் விடுவதில்லை. இரவு தூங்கும்முன் கொஞ்சமாவது படிக்க வேண்டும். இது நான் வகுத்த கறாரான திட்டம். இத்திட்டம் ஓரளவு சாத்தியப்பட்டுப்போனது. “சோறு திங்காமக்கூட இருக்கலாம். ஆனா படிக்க முடியாம இருக்க முடியாத அளவுக்கு வாசிக்கிற பழக்கத்து வரணும்” என்று என்று சொன்ன “எங்கள் ஐயா”வின்  குரல் காதைக் குடைந்துகொண்டே இருந்தது. இருக்கிறது. குடையும் காதைக் கொஞ்சம் கொஞ்சித்தான் பார்க்கலாமே என்று சில திட்டங்களைத் தீட்டியிருந்தேன் (என்ன திட்டம் என்று கேட்காதீர்கள்).
 என் திட்டப்படி “இதுவே சனநாயகம்”  என்ற நூலில் தொடங்கினேன். அதன் பாதை “கள்ளக் கணக்கு” வழியாகப் பயணித்தது. கள்ளக் கணக்கு காட்டிய பயணத்தின் முடிவில் சிறுகதை நூலுக்குப் போகலாமா என்று என் சேகரத்தில் தேடினேன். வேகமாகத் தேடிய ஓட்டத்தில் “வேப்பெண்ணெய்க் கலய”த்தின் வாசம் மூக்கைக் கொஞ்சம் பதம் பார்த்தது. முகர்ந்து பார்க்க எடுத்தேன். ஏற்கனவே படித்த நூல்தான். ஆனாலும் கதைகள் பிடிபடவில்லை. 2012இல் வெளிவந்த நூல். வெளிவந்து ஏழாண்டுகள் கடந்துவிட்டன (நேற்றுப் படித்த கதைகளே மறந்து போய்விடுகிறது. ஏழாண்டுக்கு முன் படித்த கதையா நினைவில் நிற்கப்போகிறது. அவ்வளவு மறதி. சீ, அவ்வளவு பொறுப்பின்மை).


வேப்பெண்ணெய்க் கலயம் க்கான பட முடிவு
அத்தொகுப்பின் முதல் கதை “அந்தரக் கயிறு.” அந்தரத்தில் கயிறு தொங்குமா, அந்தரத்தில் கயிற்றுக்கு என்ன வேலை, அந்தரத்திற்கும் கயிறுக்கு என்ன தொடர்ப்பு? இப்படியெல்லாம் கேள்விகள். சரி போ. கயிறு தொங்கினால் என்ன, தொங்காமல் இருந்தால் என்ன என்று கதைக்குள் சென்றேன். “கண்களை மூடிவதற்கே பயமாக இருந்தது” என்று பயத்தில் தொடங்கியது கதை. ஓ..! பயமாகத்தான் இருக்குமோ (இரவு 11 மணிக்குக் கதையைப் படித்துக்கொண்டிருந்தேன். பதினொரு மணிக்குப் பயம் கூடிக்கொள்ளுமா என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது). எதைக் காட்டி, எதைச் சொல்லி எப்படிப் பயம் கொள்ளச் செய்கிறார் என்று பார்த்துவிடலாம். பயத்துடன் நுழைந்தேன். கதை விரிகிறது. விரிந்த கதை பேருந்துப் பயணத்திற்குள் நுழைகிறது.
பயணத்தின்போது வரும் வாந்தியைத் தடுக்கக் கையாளும் அத்தனை வித்தையையும் விவரிக்கிறது அந்தரக் கயிறு. ஹா… ஹா… வாந்திப் பகுதியைப் படித்தபோது அத்தனை சிரிப்பு. வாந்தியைத் தடுத்தாட்கொள்ள நான் பட்ட பாடெல்லாம் ஓடி வந்து நின்றன. மனுசன் பிளந்து கட்டியிருக்கிறார். தடுத்தாட்கொள்ளும் வழிமுறை எலுமிச்சையில் தொடங்கி எச்சில் வழியாக நீள்கிறது (கையில் எச்சில் துப்பி முகர்ந்துகொள்ளுவது). நீளும் வழிமுறை கனவில் முடிவடைகிறது. அந்தக் கனவில் நீந்தும் கதை, பலரைக் கனவுக்கொலை செய்கிறது.
கதை நம்மின் கனவையும் சுட்டிக்காட்டிப் பல்லிளித்துப் போகிறது. கதைக்காரர் தன் அப்பனைக் கொலை செய்கிறார். அம்மாவைக் கொன்று பார்க்கிறார். இறுதியில் தன்னையும் கொலை செய்து புத்துணர்வு பெறுகிறார்.
அப்பப்பா…
திருவண்ணாமலையில் பணி செய்தபோது பயணித்த என் பேருந்து பயணங்களையும் நான் செய்த கனவுக்கொலைகள் ஒருமுறை மின்னி மறைகின்றன.

சனி, 12 அக்டோபர், 2019

கட்டுரை


குட்டி வந்தனாவும் ருசித்த சோறும்

உள்ளே நுழையலாமா என்ற யோசனையோடுதான் வாசலில் நின்றோம். சாய்வந்தனாவின் தாத்தா உடனே தயக்கத்தைப் போக்கினார். ‘உள்ள வந்துட்டு, காபி குடிச்சிட்டுதான் போகணும்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார். மறுப்புச் சொல்லுக்கு இடமில்லை. வாய் திறக்க முடியவில்லை. ‘இல்லங்க’ என்ற அசட்ட வார்த்தைக்குக்கூட வழியில்லை. நான்குபேரும் உள்ளே நுழைந்தோம். தாத்தாவின் மனம் எங்களை வீட்டின் உள்ளே இழுத்துப் போட்டது. அரக்கப்பரக்கத் தண்ணீர் கொண்டுவந்தாள் பாட்டி. வந்தனாவின் அத்தை முகமும் புன்னகையில் பூத்தது. அப்படியொரு வரவேற்பு.
இணையத் தமிழ்ப் பயிற்சிக்காகப் புதுக்கோட்டைக்கு வந்த இடத்தில் இப்படியொரு வரவேற்பு. இரண்டுநாள் பயிற்சி. முதல் நாள் பயிற்சி முடிந்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தங்குமிடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வந்து தங்கிக் கலந்துகொள்ளும் ஆண்களில் நாங்கள் நால்வர்தான். அதனால் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பலரின் வீடுகளில் யாருடைய ஒருவரின் வீட்டில் தங்க வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டம். அவர்களின் திட்டப்படிதான் நாங்கள் மெட்டி மெட்டி வாசலில் நின்றோம்.
தாத்தா, பாட்டி, அத்தை ஆகியோருக்கு இடையில் திடுமெனக் குழந்தை ஒருத்தி ஓடிவந்து தண்ணீர் கொடுத்தாள். கொடுத்துவிட்டு வீட்டின் நடுப்பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த நாற்காலியில் அமர்ந்து ஊஞ்சல் ஆடினாள். படு சுட்டி. ஊஞ்சலில் ஆடிய ஆட்டமே அதற்குச் சாட்சி. ஆடிய ஆட்டத்தில் தாத்தாவை ஒரு இடி இடித்தாள். தாத்தா திரும்பிப் பார்த்தார். சட்டை செய்ததாகத் தெரியவில்ல. ம்க்கூ என்று தன் வேலை பார்த்தாள். முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது ஊஞ்சல். ஊஞ்சலுக்கு முன்னால் பாட்டி. பின்னால் தாத்தா. பக்கவாட்டில் அத்தை அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தாள். மசியும் குழந்தை அல்ல அவள் என்று புரிந்துவிட்டது. பெரியோர்களுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றோம்.
சிறிது நேரத்தில் இரவு உணவுக்காக அழைத்தனர். வீட்டிலே இரவுச் சாப்பாடு. ‘இல்லைங்கம்மா. பக்கத்துல இருக்கற கடையில போய்ச் சாப்பிட்டுக்கிறோம்’ என்று சொன்னபோது பாட்டி கோபித்துத் திட்டினாள். ‘வீட்டுக்கு வந்துட்டு வெளியில போயி சாப்பிடறதா’ என்று சொன்னாள். பாசக் கைதியாய் மகிழ்ந்த தருணம். 
விரிப்புகள் விரித்துத் தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அமர்ந்தோம். பாட்டி இட்லிகள் வைக்கத் தாத்தாவும் அத்தையும் சட்டினியும் குழம்பும் இட்டனர். அந்த அன்பு உள்ளங்கள் உணவுகளைப் பரிமாறின.
நாங்கள் அமர்ந்தபோது சாய்வந்தனாவும் தட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அதைக் கவனித்து என் அருகில் அமரச் சொன்னேன். மசியமாட்டாள் என்று நினைத்த எண்ணம் மாயமானது. உடனே வந்து உட்கார்ந்தாள். நானும் அவளும் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். ‘வந்தனா சாப்பிடும்வரை நானும் சாப்பிடுவேன்’ என்றேன். வந்தனா சிரித்தாள்.

நான் சாப்பிட்டு முடிதேன். வந்தனா முடிக்கவில்லை. 

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கவிதை


கும்பிடப்போன தெய்வம்

கும்பிடப்போன தெய்வம்
இப்போதெல்லாம்
அடிக்கடிக் குறுக்கே வருகிறது.

நான் எது கேட்டாலும்
தருவதாய் வாக்குறுதி கொடுக்கிறது.

உழைப்பைச் சுரண்டும் வழியறிய
பாமரனைத் தன் வலையில்
சிக்க வைக்க

கடுமையான  முயற்சியை 
முடங்க வைக்க

என எண்ணி நான் போகும்போது

“எனக்கு அபிசேகம் செய்தால்
நீ எண்ணியதைச் செய்வேன்” என்ற நிபந்தனையுடன்

இப்போதெல்லாம்
அடிக்கடிக் குறுக்கே வருகிறது
கும்பிடப் போன தெய்வம்.